விடுமுறைக்கு பெயர்போன நாடான இலங்கையில் இன்றும் ஒரு விடுமுறை. யுத்த நிறைவின் ஓராண்டை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிலர் இவ்விடுமுறைகள் இலங்கையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் உள்ள முதல் தடைக்கல் என்கிறார்கள். ஆயினும் ஒவ்வொருநாளும் இயங்கவேண்டிய சேவைத்துறைகள் இந்த நாட்களிலும் இயங்குகின்றன. ஆனால் ஊழியர்கட்கு சாதாரண சம்பளத்திலும் 2, 3 பங்கு அதிகம் சம்பளம் இந்த நாட்களில் வேலை செய்யும் ஊழியர்கட்கு கிடைக்கிறது. துறைமுகம் போன்ற இடங்களில் இலங்கையில் நீண்ட விடுமுறைக்காலமான புத்தாண்டு வெசக் காலப்பகுதியில் அதிகளவான சிறுபான்மை இன ஊழியர்கள் வேலைசெய்து அதிகமாக தேடிக்கொள்கிறார்கள்.
இன்னும் எம்மை விட அபிவிருத்தியடைந்திருக்கும் மத்தியகிழக்கு நாடுகளில் நோன்பு காலங்களில் வழமையான சம்பளத்திற்கு 2 மணித்தியாலம் குறைவாக அதாவது 6 மணித்தியாலம் வேலை செய்தால் போதும். அதேபோல் இரு பெருநாட்களுக்கும் ஏறத்தாள ஒரு வாரம் விடுமுறை வழங்குகிறார்கள். இது நாட்டின் அபிவிருத்திக்கு விடுமுறைகள் தடையாக அமையாது என்பதற்கான சான்றாக அமைகிறது.
இலங்கயில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் விடுமுறையாகும். அந்த நாளில் திரையரங்கோ ஏனைய களியாட்ட அரங்குகளோ திறக்கப்படுவதில்லை. இனி வரும் காலத்தில் தனியார் வகுப்புகளும் நடத்தப்படமுடியாது.
பௌத்த மத அனுட்டானங்களுக்காக கொண்டுவரப்பட்ட இவ்விடுமுறைகள் இலங்கையின் கலாசாரத்தை விழுமியங்களை பாதுகாப்பதில் மதங்களை தாண்டி செயற்படுகிறது. இந்நாட்களில் உறவினர் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சென்று சந்திப்பது இலங்கையில் காலாகாலமாக பாதுகாத்து வரப்படும் குடும்ப பாசம், நட்பு போன்றன தழைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது. அதேபோல் மத நிகழ்வுகளை / போதனைகளை நடாத்துவதற்கு இவ்வாறான எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாள் இருப்பது வசதியாக இருக்கிறது.
இன்னும் முழுவீட்டையும் சுத்தப்படுத்த வீட்டுத்தலைவியான பெண்ணிற்கு முழுக்குடும்பத்தின் உதவியையும் பெற்றுத்தருகிறது. இன்னும் தனது தோட்டத்தில் சில பணிகளை செய்வதற்கும் அயற்பிரதேசங்களை சுத்தப்படுத்துவதில் அயலவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இவ்வாறான நாட்கள் உகந்தவை.
விடுமுறைகளை பயனுள்ள வகையில் குடும்பத்துடன் செலவிடுவோம்

0 comments:
Post a Comment