Monday, May 3, 2010

திஸ்ஸநாயகம், இலங்கையில் புதிதாய் உருவாகப்போகும் நிலப்பரப்பு


திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இன்று உடகவியாலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

திஸ்ஸநாயகம் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். அவருக்கு மன்னிப்பு வழங்குவதன்மூலம்
  • ஜனாதிபதியின் முடிவு சரியாயின் நீதித்துறை தவறானது
அல்லது
  • நீதித்துறை சரியாயின் ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கும் நிறைவேற்றதிகாரம் வரம்புமீறியது
என இரண்டில் ஒன்று நிரூபணமாகும்.

இதேவேளை ஒலிபெருக்கி தொடர்பான நீதிமன்றத்தீர்ப்பு வந்தபோது நிறைவேற்றதிகாரத்தை அதற்கெதிராக பாவிக்க மறுத்த ஜனாதிபதி 'நீதிமன்ற விவகாரங்களில் தான் தலையிடப்போவதில்லை" என்று சொன்னது ஞாபகம் வந்து தொலைக்கிறது.

2012 ஆம் ஆண்டின் மேதினம்; காலிமுகத்திடலை அண்டிய பிரதேசத்தில் கடல் நிரப்பப்பட்டு அமைக்கப்படும் 500 ஏக்கர் பிரதேசத்தில் நடைபெறும் என மேதின உரையாற்றிய ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.

கடல் பகுதிகளில் செயற்கையாக நிலப்பிரதேசங்களை உருவாக்குவது துபாயில் ஆரம்பித்து, பஹ்ரெய்ன், கத்தார், சவூதி அரேபியா ஆகிய பிரதேசங்களில் இருக்கும் திட்டம். ஆனால் இந்நாடுகளில் ஏற்கெனவே உள்ள நிலப்பரப்பில் வெளிநாட்டவர் நிலம் வாங்க தடை இருப்பதால் இத்திட்டங்களுக்கு அர்த்தம் இருக்கின்றது. மேலும் எண்ணெய் வளம் மிக்க நாடுகள் தனது வசதியப்பொறுத்து எதையும் செய்யும்.

எப்படியோ பாகிஸ்தானையும் தொற்றிக்கொண்ட இக்காய்ச்சல் இன்று இலங்கையையும் வந்தடந்துவிட்டது. ஆனால் இலங்கையில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நத்தை வேகத்தில் நடக்கிறது. அபிவிருத்தியை காணாத பல இடங்கள் நாட்டின் சகல பிரதேசங்களிலும் இருக்கின்றன. சரியான பாதையமைப்போ, வடிகாலமைப்போ இன்றி நாட்டின் பெரும்பகுதி இருக்கின்றது. அவ்வளவு ஏன்? ஜனாதிபதி தேர்தலுக்கு முன் திறந்துவைக்கப்பட்ட உறுகொடவத்த மேம்பாலத்திற்கு இன்றுவரை மின்விளக்குகள் இல்லை!

ஏற்கெனவே கொழும்பு பிரதேசம் திட்டமிட்ட அபிவிருத்தி இன்மையால் மாடிக்கட்டடங்களை கொண்ட சேரியாகி வருகின்றது. கொழும்பு 7 இல் கூட வறிய மக்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்.

இத்திட்டம் ஜனாதிபதிக்கு தனது பெயரை நிலைநாட்ட உதவும். சில பெரிய நிறுவனங்கள் இலங்கையை நோக்கி வரக்கூடும். அதைதவிர என்ன இலாபம் இருக்கிறதென்று தெரியவில்லை. முக்கியமாக பொதுமக்களுக்கு.

காலிமுகத்திடல் முதல் பம்பலப்பிட்டியவரை குறுகலான சாலைகள் வேறு. புதிதாக உருவாகப்போகும் 500 ஏக்கர் நிலத்திற்கு பொருட்களையோ மக்களையோ போக்குவரத்துச்செய்யக்கூட அகலமான பாதைகள் இல்லை. பாதைகளை அகலமாக்க கூட முடியாது. காலிவீதியில் கொள்ளுப்பிட்டி முதல் சின்னமன் ஹோட்டல் வரை பாதி பாதையே திறந்துவிடப்பட்டுள்ளது.

அதைவிட இலங்கையின் கரையோரத்தை கடலரிப்பில் இருந்து காக்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தினாலும் பரவாயில்லை.

மொத்தத்தில் பெருமைக்கு மாவிடிக்கிறமாதிரி இல்ல?

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/