
கமலின் இரண்டுபடங்களின் பெயரைக்கூறச்சொன்னால் எனக்கு ஞாபகம் வருவது நாயகன், அன்பே சிவம் ஆகியவையே. நாயகனில் நாலுபேருக்கு நன்மை செய்தால் எதுவுமே தப்பில்லை என்று கூறும் நாயகன் கடைசியில் எவ்வித குற்றமும் செய்யாத என்னை எதற்கு அநாதையாக்கினாய் என்ற கேள்விக்கு பலியாகிப்போகிறான். மற்றவன் வயிற்றுக்குள் உன் உணவு இல்லையப்பா என்று கூறும் அன்பே சிவம், அன்பை மட்டுமே போதிக்கின்றது என்பதில் யாருக்கும் கருத்துவேற்றுமை இல்லை.
என்னதான் நியாயம் இருந்தாலும் வன்முறையை கையிலெடுத்தவன் வன்முறைமூலமே சாவதை நியாயப்படுத்தியிருக்கும் படங்களான சுப்ரமணியபுரம், அஞ்சாதே போன்ற படங்கள் வெற்றிபெறுகின்ற; தேசபக்தி என்ற போர்வையில் மனிதர்களை சுட்டுத்தள்ளுகின்ற விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் காணாமல் போயிருக்கின்ற; சுருக்கமாக மக்கள் வன்முறையை நிராகரித்திருக்கிற காலப்ப்பகுதியில் சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உபதேசிக்கின்ற படத்தை கமல் நமக்கு தருகிறார்.
இந்த உன்னைப்போல் ஒருவன்தான் இலங்கையின் திரையரங்குகளில் இருந்து நேற்றோடு தூக்கப்பட்டுள்ளது. பதிவுலகில் கிழி கிழியென்று கிழிக்கப்பட்ட கந்தசாமி இன்னும் ஓடிக்கொண்டிருக்க பதிவுலகால் ஆஹா ஓஹோ என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட உன்னைப்போல் ஒருவன் திரையரங்கை விட்டு ஓடியிருக்கிறது.
மொத்தமாக இரண்டுமணிநேரமே ஓடும் இந்த படத்தில் வானொலிகளில் ஒலிபரப்பான பிரபலமான பாடலகள் இல்லை என்றே சொல்லலாம். கதையோட்டத்திற்கு பாடல்கள் அவசியமில்லை என்று கமல் கருதியிருந்தால் சில பாடல்களை வெளியிட்டு படத்தில் பாடல்கள் இருப்பதாக மக்களை ஏமாற்றி திரையரங்குகளுக்கு வரச்செய்திருப்பது எந்த ஒரு terminology ஐ பாவித்து நியாயப்படுத்தினாலும் இலகு மொழிப்பிரயோகத்தில் ஏமாற்றுதல் என்றே சொல்லப்படமுடியும். அத்துடன் I AM NEW FACE OF TERROR என்று பலகுரல்கள் சொல்லுவதன்மூலம்; பலர் வன்முறையை கையிலெடுப்பதாக மக்களை நம்பசெய்ததும் ஏமாற்றுதலே.
படத்தில் கமல் கேட்பதுபோல் ஒரு கரப்பான்பூச்சி வீட்டுக்குள் வந்தால் உணவு கொடுத்து வளர்பீங்களா என்றகேள்விகளை அரசாங்கங்கள் கேட்கத்துவங்கினால் சிறை அலல்து திறந்த வெளிச்சிறை என்று அரசாங்கங்களுக்கு தலையிடி தரும் பிரச்சினை இருக்காதே.. இதையாவது ஏன் யாரும் எதிர்க்கவில்லை?
அதுமட்டுமா படம் முழுக்க வியாபித்திருக்கும் அபத்தங்கள் பற்றியும் பெரிதாக யாரும் பேசவில்லை.
- குண்டுகள் இல்லாத பைகளை மக்கள் கூட்டம் மிக்க இடங்களில் கமல் வைக்கிறார். அதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன?
- உயரமான கட்டடத்தின் கமல் ஏறுகிறார். இலங்கையென்றால் எல்லா உயர்ந்த கட்டடங்களின் உச்சியிலும் நவீன கருவிகளுடன் இராணுவம் இருக்கும். ஆனால் பாகிஸ்த்தானுடனும் சீனாவுடன் சண்டையிட தயாராகும் இந்தியாவின் இராணுவம் இவ்வாறான பாதுகாப்பு ஓட்டைகள் மூலம் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது.
- அடிக்கடி ஒலிபரப்பாகும் பாங்கு ஒலியும், இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதும், கமலின் தாடியும், கமலின் பெயர் மறைக்கப்பட்டிருப்பதும் சொல்லவருவது என்ன?
- படத்தில் 3 முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் குஜாரத் கலவரங்களின் பின் வன்முறையை கையிலெடுப்பவர். இன்னொருவர் சொந்த மண்ணை இழந்து அதற்காக போராடும் ஜனநாயக ரீதியில் பலகட்சி அரசியல் முறையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலஸ்த்தீன இயக்கத்துடன் தொடர்புகளை பேணுவதாக காட்டப்படுகிறார். இவை இரண்டையும் படம் எவ்வாறு குற்றம்பிடிக்கிறது?
- இன்னுமா கமலைப்பிடிக்கமுடியவில்லை என்று ஆத்திரப்படும் மோகன்லால் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு ஆவேசமாக செல்கின்றார். கமலின் கை குலுக்க..
இந்தப்படம் பற்றிய ஞானியின் கருத்தை வாசிக்க http://www.gnani.net/.
மொத்தத்தில் நரகாசுரன் அழிந்த நாளாக இந்துக்கள் கொண்டாடுகின்ற தீபாவளி பண்டிகையன்று நவீன நரகாசுரனான உன்னைபோல் ஒருவனும் தூக்கப்பட்டிருப்பது எமக்கு மகிழ்ச்சியே..
0 comments:
Post a Comment